சிறிய பட்ஜெட்டில் இயக்குனர் தான் கூறும் ஒரு வரி கதையை பத்து பதினைந்து நிமிடங்களில் சொல்லவேண்டும். இதற்கு திரைக்கதை நன்றாய் அமைந்திருக்க வேண்டும். பெரியமனுசி பதினைந்து நிமிடம் ஓடும் படம். வயோதிகர்கள், முதுமையில் கைவிடப்பட்ட மனிதர்கள், விதவைகள் என அவர்களின் வலிகளின் ஒரு துளியை குறும்படமாக தந்துள்ளார்.
மயானத்தில் படம் தொடங்குகிறது அரசாங்க அதிகாரி வந்து யார் பிணம் என வெட்டியானிடம் கேட்கிறார் அவன் செருப்பு தைக்கும் வேலாயி என்கிறான். அரசாங்க அதிகாரி என்னோட அசால்ட்டு தனத்தால ஒரு உயிர் செத்து போச்சே என தனக்கு தானே கூறிக்கொண்டு வருந்துகிறார். காட்சி பின்னோக்கி செல்கிறது. சாலை ஒரத்தில் செருப்பு தைத்து கொண்டுள்ளாள் வேலாயி என்ற மூதாட்டி. வயோதிகத்தால் உருக்குலைந்த உடம்பு, அனுபவம் தந்த சத்தியமான வார்த்தைகள், நிராகரிப்பின் வலி என அனைத்தையும் ஏற்றுக்கொண்டு வாழும் வாழ்க்கை வேலாயிக்கு.
அரசாங்கம் தரும் உதவி தொகைக்காக அல்லாடுகிறாள் அந்த மூதாட்டி, அரசாங்க அதிகாரியை பார்க்க வேலாயி மாடியில் ஏறி செல்லும் போது அதற்கு ஏற்ற பின்னணி இசை உள்ளதால் அந்த காட்சியில் மனிதாபிமானம் உள்ள அனைவரும் ஒரு முறை கண்கலங்கிவிடுவர்.
அந்த அதிகாரி வேலாயி வரும் போதெல்லாம் நிராகரித்து அனுப்புகிறார். பக்கத்திலிருக்கும் அலுவலர் “ஏன் சார் இப்படி அலயவக்கிறீங்க பாவம் சார்” என்கிறார். “சாக போர காலத்துல இதுக்கெதுக்கு துட்டு விடுங்க சார்” என பதில் கூறுகிறார் அதிகாரி. இது இன்றைய அதிகாரிகளில் சிலர் இவ்வாறு உள்ளதால் பல அப்பாவி ஜனங்களின் வாழ்க்கை சீரழிக்க படுவதை உணர வைக்கிறது. நிராகரிப்பின் வலியும் பணம் இல்லாததால் வைத்தியம் பார்க்க முடியாமலும் வேலாயி இறக்கிறாள்.
இந்நிலையில் அரசாங்க அதிகாரியை என்கொயரி செய்ய மேலிடத்திலிருந்து நாளை ஆள் வருவதாக அரசாங்க அதிகாரிக்கு தொலைபேசி வருகிறது.
அவர்கள் வரும் முன்பே வேலாயிக்கு பணம் கொடுத்துவிட வேண்டுமென வேலாயியை தேடி செல்கிறார் அதிகாரி. வேலாயி இறந்துவிட்டதாக தெரிந்து கொண்டு வருந்துகிறார்.
இறுதியில் மீண்டும் மயானத்தை காட்டுகிறார்கள் வேலாயி எரிந்து கொண்டுள்ளாள். வேலாயியை எரிக்கும் தீயின் அனல் படம் பார்க்கும் நம்மையும் தாக்குகிறது.
படத்தினை காண கீழ்க்காணும் முகவரியை தொடர்பு கொள்ளவும்:
பெரிய மனுஷி (குறும்படம்) இயக்கம் : ஜமீல் அஹமத்
88, தேவி பட்டினம் ரோடு
கேணிக்கரை, ராமநாதபுரம்.