தமிழாக்கம் – எஸ். கிருஷ்ணமூர்த்தி
அதுல் – இளைஞன் , ஞானதாவின் முறைப்பையன்
ஞானதா – பதினான்கு வயது சிறுமி, பிரியாநாத் – துர்க்கா மணி – மகள்
மாதுரி – அநாத் நாத்தின் மகள்
கோலாக் நாத் – சுவர்ண மஞ்சரி (கணவன் மனைவி) கோலாக் நாத் இறந்து விடுகிறார்.
பிரியாநாத் – துர்க்கா மணி
அநாத் நாத்- இவரது மனைவியின் பெயர் குறிப்பிட படவில்ல , சிறிய ஓரகத்தி என்று குறிப்பிடுகிறார்.
ஹரிபால் – வங்கத்தில் இருக்கும் வசதி குறைந்த கிராமம்
சம்பு சட்டர்ஜி – பாமினி – துர்க்கா மணியின் அண்ணன் , அன்னி
———————————————————-
ஒரு குடும்பத்து உறவினர்களுக்குள் நடக்கும் கதைதான் என்றாலும், நாவல் பெண்களின் அகவலிகளை முன் வைக்கின்றது. நாவலில் இயல்பாய் பயணிக்க முடிகிறது. மொழிபெயர்ப்பாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சிறப்பான முறையில் செய்திருக்கிறார்.
ஏழை பெண் (துர்க்கா மணி ,அவளுக்கொரு பெண் சிறுமி (ஞானதா), கருப்பு நிறத்தில் பிறந்ததால் ஞானதாவை யாரும் திருமணம் செய்ய முன் வருவதில்லை, மேலும் இவர்கள் ஏழை வேறு அந்த கவலையில் மூழ்கி இருக்கும் போது உறவுக்காரனான அதுல் வருகிறான், அவனுக்கு உள்ளூர ஞானதாவின் மேல் அன்பு இருக்கிறது.
வெளிப்படையாய் அவன் காட்டிக் கொள்ளவில்லை. அவன் வீடுதேடி வந்து அம்மா பிரசாதம் குடுத்துவிட்டதாக கூறிக் கொண்டு ஞானதாவை பார்க்க வருகிறான். ஞானதாவிற்கு ஆசையாக வளையல்களை வாங்கி வருகிறான்.
அவனிடம் தன் மகளின் நிலையை எண்ணி வருந்துகிறாள் துர்க்கா மணி.
“ “ அப்பா அதுல், இந்த காலத்துப் பையங்க இரக்கம் உள்ளவங்கன்னு எல்லோரும் சொல்றாங்க. உன்னோட காலேஜில படிக்கிற பையன்கள்ளே யாராவது இரக்கப்பட்டு இவளைக் கல்யாணம் பண்ணிப்பானான்னு விசாரிச்சு பாக்கறியாப்பா..
அப்படி யாராவது இவளை ஏத்துக்கிட்டா நான் உன்னோட இந்த உதவிய மறக்கவே மாட்டேம்ப்பா..
இது அந்த தாயின் ஏக்கம்.
இந்த வரிகளை நான் வாசித்த பொழுது எனக்கு என் கிராமத்தில் நடந்த பழைய நினைவுகள் வந்து கண்கள் குளமாகியது. முதிர்கன்னிகளை வைத்திருக்கும் குடும்பங்களின் வலிகளை நான் அறிவேன். அந்த தாயின் உள்ளம் அந்த வீட்டிற்கு வரும் மனிதர்களிடம் புலம்பித் தவிக்கும்.
இந்த வலியினை எனது மனசு சிறுகதையில் வெளிப்படுத்தியுள்ளேன். கணையாழியில் வெளிவந்துள்ளது.
நாவலில் வரும் துர்க்கா மணியும் , தனது மகளின் வாழ்வை எண்ணி ஏங்குகிறாள்.
சிறிது நாட்களில் பிரியாநாத் உடல் நிலை சரியில்லாமல் இறக்கும் தருவாய்க்கு சென்று விடுகிறார். அங்கு வரும் அதுல் பிரியாநாத்திற்கு ஞானதாவின் வாழ்க்கையை பற்றி கவலைபடாதீர்கள் என நம்பிக்கை அளிக்கிறான் , சிறிது நேரத்தில் பிரியாநாத் இறந்து விடுகிறார். இறப்புக்கு பின் முன்பிருந்த சிறிய நம்பிக்கைகளும் துர்காமணிக்கு இல்லாமல் போகிறது. தன் மகளின் வாழ்க்கை இருண்டு போய் விட்டது, என புலம்பி தவிக்கிறாள். அவளுக்கிருக்கும் ஒரே நம்பிக்கை அதுல்தான்.
அவன் கல்கத்தாவிற்கு சென்றுவிட்டான்.
பின் வீட்டில் இருப்பவர்களின் தொல்லையால் அவள் அண்ணன் வீடான ஹரிபாலுக்கு செல்கிறார்கள் தாயும் மகளும், ஹரிபால் மலேரியா மல்கி இருக்கும் ஒரு கிராமம். சாணிகளின் வாசம் எப்போதும் நிறைந்திருக்கும் அந்த கிராமத்தில் சம்பு சட்டர்ஜியிடம் அடைக்கலம் தேடி வருகிறார்கள் .
சம்பு சட்டர்ஜி சில நாட்கள் வேண்டும் என்றால் இரு. இங்கேயே இருக்க வேண்டும் என்றால் நான் சொல்கிறவனுக்குத்தான் உன் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை அதிகாரமாக முன் வைக்கிறார்.
துர்கா தன் மகளுக்கு அதுலின் வழியாக ஒரு நல்ல வாழ்க்கை அமையும் என நம்புகிறாள். அதுலின் கடிதத்திற்காக ஏங்குகிறாள். அதுலின் கடிதம் வருவதில்லை.
நாவலில் துர்க்காமணி , அதுலின் கடிதத்திற்காக தபால்காரரிடம் உரையாடும் காட்சி மிகவும் நெகிழ்வானது.
சில நாட்களுக்கு பின் மீண்டும் வலுக்கட்டாயமாக திருமண பேச்சை எடுக்கும், சம்பு சட்டர்ஜியை, அவனது மனைவி பாமினி தன் ஆக்ரோசமான வசைகளின் வாயிலாக அவனை அடக்குகிறாள் பின் மீண்டும் அந்த ஏழைத்தாயும், ஞானதாவும் வேறு வழியில்லாமல் முன்பிருந்த இடத்திற்கே வருகிறாள்.
இதற்கிடையே மலேரியா நோய்க்கு ஆட்பட்டு ஞானதா மிகவும் மெலிந்து மோசமான நிலைக்கு சென்று விடுகிறாள்.
நிர்கதியற்று வீட்டிற்கு வரும் இவர்களை பார்த்து சுவர்ண மஞ்சரி சிரித்து மகிழ்கிறாள்.
ஏச்சுகளுக்கும், பேச்சுகளுக்கும் இடையே அந்த ஏழைத்தாய் மீண்டும் அந்த வீட்டிற்குள்ளே வந்து அநாத் நாத்திடம் மன்றாடுகிறாள்.
இந்நிலையில் அதுலுக்கு , மாதுரியை பேசி முடித்து விட்ட செய்திகேட்டு அவனை ஏசுகிறாள் துர்கா மணி.
அதுலின் மனதை அனைவரும் சேர்ந்து மாற்றிவிட்டிருந்தனர். ஆனால் அதுலின் அடிமனதில் ஞானதாவின் மீது கொண்ட காதல் பசுமையாய் இருந்து கொண்டேதான் இருந்தது.
ஞானதாவை அவளது தாயே பல முறை ஏசுகிறாள், கருப்பாய் பிறந்ததினால்தானே உன்னை யாரும் கல்யாணம் செய்ய முன்வரவில்லை, சனியனே ஏண்டி என்னை பாடாய் படுத்துகிறாய் என அழுது குமுறுகிறாள்.
இந்த கவலையே துர்கா மணியை மரண படுக்கைக்கு தள்ளி விடுகிறது.. இறுதியில் அநாத் நாத்திடம் வயதானவன் யாருக்காவதும் ஞானாவை திருமணம் செய்து வைத்துவிடு என கெஞ்சுகிறாள்.
இறுதியில் ஒரு வயதானவனை பெண்பார்க்க அழைத்து வருகிறார்கள், அவனும் மலேரியா தாக்கி மெலிந்திருக்கும் ஞானாவை வேண்டாம் என கூறிவிட்டு வெளியேறுகிறான்.
இதைக்கேட்டு ஏற்கனவே நோயில் வாடி இருக்கும் அந்த தாய் துர்க்கா மணி இறந்து விடுகிறாள்.
இறுதிக் காரியத்திற்காக கங்கை கரைக்கு துர்கா மணியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு எரியூட்ட படுகிறது
இந்நிகழ்வு அதுலின் மனதில் பல கேள்விகளை எழுப்புகிறது. அவனுள் அமிழ்ந்திருந்த மனித நேயம் விழித்துக் கொள்கிறது. ஞானாவின் மேல் இருக்கும் பரிசுத்தமான அன்பால் அவன் அவளை மீண்டும் நேசிக்க துவங்குகிறான் . அதுல் அநாதையாய் , கங்கை கரையோரம் வெறுமையாய் நின்றிருக்கும் ஞானாவின் கரத்தை பிடித்து “ வா , வீட்டுக்கு போகலாம், பாக்கி பேரல்லாம் முன்னால போயிட்டாங்க..
என்று கூறுவதோடு நாவல் முடிகிறது.
நாவலை வாசித்து முடித்தவுடன் , அக்கால சூழ்நிலையில் இருந்த பெண் அடக்குமுறை செயல்களே நினைவில் வந்து சென்றது. எனினும் இந்த நாவலில் ஆண்களை விட பெண்களே அந்த ஏழை பெண்ணின் மனதை காயப்படுத்துகிறார்கள். நாவலில் வரும் கங்கை, கிராமத்தை பற்றிய விவரனைகள் எல்லாம் அப்படியே வங்கத்தில் இருக்கும் கிராமங்களை கண் முன்னாடி கொண்டு வந்து நிருத்துகிறது.
நாவல் எழுதப்பட்டு எவ்வளவோ வருடங்கள் சென்றுவிட்டாலும் நாவலில் சுட்டிகாட்டப்பட்டுள்ள அடக்குமுறைகள் இன்னும் சமூகத்தில் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன என்பது கசப்பான உண்மையாகவே உள்ளது.
என்னளவில் அனைவரும் வாசிக்க வேண்டிய மிக முக்கியமான நாவல் இது, புத்தகத்தை வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
———————————-
National Book Trust, India
Nehru Bhawan
5 Institutional Area, Phase-II
Vasant Kunj, New Delhi-110070
———————————-
நல்ல அறிமுகம்….
புத்தகக் கண்காட்சியில் வாங்கியதா?
நானும் நிறைய புத்தகங்கள் வாங்கினேன். ஒவ்வொன்றாய் படிக்க வேண்டும். இப்போது ஃபிஜித் தீவு பற்றிய ஒரு புத்தகம் படித்துக் கொண்டு இருக்கிறேன்….
கடைசியில் கொடுத்திருக்கும் முகவரி அந்த நூல் அச்சிடப்பட்ட காலத்தியது. இப்போதைய முகவரி –
National Book Trust, India
Nehru Bhawan
5 Institutional Area, Phase-II
Vasant Kunj, New Delhi-110070
[…] திருமணமாகாதவள் -சரத்சந்திரர் தேவதாஸ்-சரத்சந்திரர் சரத்சந்திரர் கடிதம் ஆஷாபூர்ணாதேவி முதல்சபதம் […]