தில்லிகை என்ற இலக்கியவட்டம், தில்லியில் தன் செயல்பாட்டை இன்று மாலை தில்லித் தமிழ் சங்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்தின் வாயிலாக துவங்கியுள்ளது. திருமதி எம்.ஏ. சுசீலா அம்மாவின் வாயிலாக தில்லிகை இலக்கியவட்டத்தை பற்றி அறிந்து கொண்டேன்.

முதல் கலந்துரையாடலே நான் நேசித்து சுற்றிதிரிந்த எங்கள் ஊரான மதுரையை பற்றி என்பதால் மதியம் ஒரு மணிக்கே கிளம்பி தமிழ் சங்கம் வந்து விட்டேன். நீங்கள் இதை அளவுக்கதிகமான ஊர்பாசம் என்றே எடுத்துக் கொள்ளலாம்.

உலகம் ஒரு நிறையாத் தான் ஓர் நிறையாப்

புலவர் புலக் கோலால் தூக்க, உலகு அனைத்தும்

தான் வாட, வாடாத தன்மைத்தே-தென்னவன்

நான்மாடக் கூடல் நகர்.

– பரிபாடல்

பாரதி அரங்கத்தில் வேலை நடந்து கொண்டிருந்தது… இங்குதானே கூட்டம் நடைபெறுவதாக சொன்னார்கள் , பரவாயில்லை மணி ஒன்னு, முப்பது தானே ஆகிறது, மூன்று மணிக்குதானே கூட்டம் என சொல்லி இருக்கிறார்கள் அதற்குள் அரங்கம் தயார் ஆகிவிடும் என நினைத்துக் கொண்டே நூலகம் சென்றேன் .

தினசரி செய்தி தாள்களை நோட்டம் விட்டு விட்டு, கீழே வந்து பார்த்த பொழுது திரு. ஸ்ரீதரன் அவர்கள் திருவள்ளுவர் அரங்கத்திற்கு கூட்டம் மாற்றப்பட்டு விட்டதற்கான அறிவிப்பை தாளில் எழுதி சுவரில் ஒட்டிக் கொண்டிருந்தார்.

குறித்த நேரத்தில் கூட்டம் துவங்கியது குறைவான இலக்கிய ஆர்வலர்கள் வந்திருந்தாலும் , அனைவரும் முழுமனதோடு அறிஞர்களின் பேச்சை கேட்க ஆவலுடன் அமர்ந்திருந்தனர். தில்லி பதிவர்களில் திரு. ஷாஜகான் , திரு .   வெங்கட், திருமதி. முத்துலட்சுமி மற்றும் திரு. கணேஷ் அவர்களும் வந்திருந்தனர்.

முதலில் திரு சே.ராம்மோகன் அவர்கள் சங்கம் காட்டும் மதுரை என்ற தலைப்பில் பேசினார்..

இந்தியாவிலே மிக பழமையான நகரங்கள் இரண்டு உள்ளன எனவும், ஒன்று வாரணாசி, மற்றொன்று மதுரை. சில நகரங்கள் சமயத்தில் சொல்லபட்டுருக்கின்றன, சில நகரங்கள் இலக்கியத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன , ஆனால் மதுரை நகரம் சமயத்திலும் , இலக்கியத்திலும் குறிப்பிடப் பட்டுள்ளது மதுரை நகரின் சிறப்பு என்றார்.

மதுரைக்கு மருத என்ற பெயரும் உள்ளதாக பாடலின் வாயிலாக விளக்கினார். ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம், பத்து பாட்டில் ஒரு தொகுப்பான மதுரைக் காஞ்சியில் இருந்தும் பல பாடல்களை மேற்கோள் காட்டி மதுரையின் சிறப்பை விளக்கினார்.

இதற்கடுத்து முனைவர் பேராசிரியை எம்.ஏ. சுசீலாஅவர்கள் பேசினார்…

மதுரையை பற்றி பேசுவதற்கான வாய்ப்பை அளித்த தில்லிகை இலக்கிய வட்ட குழுவினருக்கு நன்றி என அறிவித்தார். மதுரையிலே இருக்கும் போதே ஒரு இலக்கியவட்டம் தொடங்க வேண்டும் என்பது என் நெடு நாள் கனவாக இருந்து வந்தது, அப்பொழுது வேலையில் இருந்த காரணத்தினால் முறையாக செயல்படுத்த முடியவில்லை என்றார்.

ஒரு காலத்தில் காமராஜர் ஆட்சியின் போது நகர அமைப்பை பற்றி தெரிந்து கொள்வதற்காக வெளி நாட்டிற்கு செல்ல வேண்டும் என அதிகாரிகள் கூறிய பொழுது

எதுக்காக அங்க போறீங்க.. மதுரைக்கு போங்க அங்க போயி பாருங்க என்றாராம்.

பரிபாடலில் இருந்து மதுரையை பற்றிய பாடல்களை பாடி விளக்கினார். அரங்கில் ஒலி அமைப்பில்லாமலேயே அவரது குரல் அரங்க வாசகர்களை கட்டி போட்டு வைத்திருந்தது. அவளவு சக்தி வாய்ந்த குரல்.

இலக்கிய பாடல்களை அவர் எந்த ஒரு குறிப்பையும் பார்க்காமல் பாடியது , கேட்பதற்கு சிறப்பாகவும், மனதிற்கு உற்சாகமாகவும் இருந்தது.

தொடர்ந்து மதுரையின் ஆத்மாவை விளக்கினார்.

சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டத்தில் , மதுரையை காடு என பாடப் பட்டுள்ளதாக குறிப்பிட்டார்..

பாலை என்பதற்கான விளக்கம் சங்க காலத்தில் இல்லை எனவும்..

பாலை என்பதற்கு சிலம்பு இலக்கணம் சொல்வதாக..

“முல்லையும்
குறிஞ்சியும்
முறைமையில் திரிந்து
நல்லியல்பு இழந்து
நடுங்கு துயர் எய்திப்
பாலை என்பதோர் படிவம்
கொள்ளும் …”  என்ற பாடலை முன் வைத்து விளக்கினார்.

மதுரையின் சிறப்பை .. தூங்கா நகரமான மதுரையில் எப்போது சென்றாலும், சாலையோர நடைபாதைகளில் வடைகளும், இடியாப்பங்களும் விற்கப்படுகிறது , ராத்திரி பணிரெண்டு மணிக்கு சென்றாலும் சுட சுட கிடைக்கும். இங்கே எட்டுமணிக்கெல்லாம் கடையை அடைத்துவிடுவார்கள் என சொல்லவும் பார்வையாளர்கள் முகத்தில் சிரிப்பு உதித்து மறைந்தது.

பாடல்களின் வாயிலாகவும் விளக்கினார்.

கோவலன் மறைவிற்கும் அவன் செய்த ஊழ்வினையே காரணம் என்பதை பாடலின் வழியாக விளக்கினார்

 நீலி என்ற பெண்ணின் சாபமே உன் கணவனின் மரணத்திற்கு காரணம் என மதுராபுரி தெய்வம் விளக்கும் காட்சியை , சுசீலா அம்மா சிறப்பாய் விளக்கினார்.

இறுதியாக திரு விஜய் ராஜ்மோகன் அவர்கள் , மகாவம்சம் காட்டும் மதுரை என்ற தலைப்பில் பேசினார்..

மகாவம்சம் நூலின் சிறப்பையும், அந் நூல் உருவான வரலாறையும் விளக்கினார்.

சிறப்பாய் நிகழ்வு நடந்து முடிந்தது.

மதுரையை பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த சுட்டியை அழுத்தவும்.

8 Responses so far.

  1. ramani says:

    இன்று துவங்கியுள்ள இலக்கியவட்டம்
    தொடர்ந்து சிறப்புடன் வளர்ந்து சிறக்க
    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  2. தில்லியில் இலக்கிய வட்டம் தொடங்கி முதல் நிகழ்வாக மதுரை குறித்து கூட்டம் நடத்தியது பெருமகிழ்வைத் தருகிறது. தில்லிகை இலக்கிய வட்டம் மதுரை மல்லிகை போல் சிறக்கட்டும். பகிர்விற்கு நன்றி.

  3. Venkat says:

    நல்ல பகிர்வு விட்டலன்….

    முழுமையும் அழகாய் பகிர்ந்து இருப்பது அழகு…

    தொடர்ந்து சந்திப்போம்….

  4. Karthik says:

    தில்லிகை இலக்கியவட்டதிற்கு வாழ்த்துகள்.

  5. இந்த விழாவிற்கு எப்படியும் வந்து விட நினைத்தேன் சிறிது வேலைப் பளுவின் காரணமாக வர இயலவில்லை,அந்த குறையை நண்பரின் பகிர்வு போக்கி விட்டது…..

    தில்லிகைக்கும், நண்பர் தேவரஜ்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்….

  6. விஜய் says:

    கூட்டம் பற்றிய விவரணை அருமை. நன்றி.

  7. Vaidehi Sridharan says:

    அற்புதம் தேவராஜன்!

  8. நன்றி
    அன்புடன்
    கவிஞர் இரா .இரவி

    http://www.eraeravi.com
    http://www.kavimalar.com
    http://www.eraeravi.wordpress.com
    http://www.eraeravi.blogspot.com
    http://eluthu.com/user/index.php?user=eraeravi
    http://en.netlog.com/rraviravi/blog
    இறந்த பின்னும்
    இயற்கையை ரசிக்க

    கண் தானம் செய்வோம் !!!!!


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube