இலக்கியங்கள் வாழ்க்கையை நேசிக்கத்தான் கற்றுக்கொடுக்கின்றன. எப்போதும் பரப்பாகவும், வேகமாகவும் சென்றுகொண்டிருக்கிற இக்காலகட்டத்தில் மனிதப் பண்புகளைக்கொண்டு வாழ்வதே அரிதுதான். எங்கு பார்த்தாலும் வன்மம் தலைவிரித்தாடுகிறது. சில தினங்களுக்கு முன் , மகன் தன் தாயையே மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்திருக்கிறான்; இன்னொருவன் தன் தாயை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். எல்லாம் டிஜிட்டல் மையமான இந்த வாழ்க்கையில் நினைத்துக்கூட பார்க்க முடியாத பல கொலைகளும், கேவலமான விசயங்களும் நடந்து கொண்டுதானுள்ளது.
வாழ்க்கை முட்களும், புதைகுழிகளும் நிறைந்த கொடூரமான ஒரு வழியில் பயணித்துக்கொண்டிருந்தாலும்; வாழ்க்கை அழகானது அற்புதமானது என பூக்கள் நிறைந்த பாதையை சிலர் நமக்கு காட்டிக்கொண்டுதான் உள்ளனர்.
சமீபத்தில் நண்பர் மதுரை மைந்தன் அவர்கள் இயக்கிய கரு வேப்பிலை என்ற குறும்படத்தைப்பார்த்தேன். மதுரை மைந்தன் அவர்கள் வித்தியாசமாக வாழ்க்கையை அணுகக் கூடிய அற்புதமான மனிதர். சில வருடங்களுக்கு முன் முக நூலின் வழியாய் அறிமுகம் ஆனார். அவரைத்தேடி அவரது வீட்டிற்குச் சென்றேன். இலக்கியத்தைப்பற்றியும், வாழ்க்கையைப்பற்றியும் அன்பாகப் பேசினார். அவரது பேச்சில் அதிகமாக திரைமொழிப் பற்றியே இருந்தது. நல்ல குறும்படங்களை இயக்க வேண்டும் எனக் கூறிக்கொண்டிருந்தார்.
பேசிக்கொண்டிருக்கும் போதே ஒரு திரைக்காட்சியைப்பற்றி விளக்கினார். விளம்பரம் பற்றிய திரைக்காட்சி அற்புதமாக அவர் விவரித்த காட்சி இருந்தது. பின் எப்போதாவது விடுமுறை செல்லும்போது அவரை சந்திப்பேன். எழுத்தாளர்களைப்பற்றி மிக உயர்வான எண்ணம் கொண்டு உபசரிப்பார்.
கரு வேப்பிலை குறும்படம் வாழ்க்கையில் நம்மை வளர்த்துவிட்ட பெற்றோர்களை பேணிக்காக்க வேண்டும் என்ற அற்புதமான செய்தியை தன் காட்சி மொழியில் அழகாக கொடுத்துள்ளார். செருப்பு தைக்கும் தொழிலாளி தன் மகனை கஷ்ட்டப்பட்டு வளர்த்து நல்ல நிலைக்கு கொண்டு வருகிறார்; ஆனால் மகனோ சமுதாயத்தில் நல்ல நிலைக்கு வந்த பின்னர்; தன்னை உழைத்து உயர்த்திவிட்ட தந்தையையும் அவர் தொழிலையும் கேவலமாக நினைத்து ஒதுக்குகிறான்.
நாம் ஆசையாக வாசனைக்காக சேர்த்துக்கொள்ளும் கறிவேப்பிலையை பயன் படுத்திவிட்டு அவற்றை உணவிலிருந்து ஒதுக்கி வெளியில்தானே வீசுகிறோம்; அதைப்போலவேதான் பெற்றோர்களுமா? என்ற கேள்வியின் வழியாய் நம்மை யோசிக்க வைக்கிறார்.
ஒரு இடத்தில் இயக்குனர் கேமராவைப்பார்த்து வாழ்க்கை தத்துவத்தை பேசிவிட்டு நீங்க என்ன சொல்றிங்க என பார்வையாளர்களைப் பார்த்து கேட்கிறார். இந்தக் காட்சியை தவிர்த்திருக்கலாம். பின்னனி இசை அற்புதமாக உள்ளது. எடிட்டிங் அழகாக செய்துள்ளனர்.
நண்பருக்கு வாழ்த்துக்கள்.
அற்புதமான குறும்படம் அனைவரும் பார்த்து அவரை ஊக்கப்படுத்த வேண்டும்.
https://www.youtube.com/watch?v=IPg2ZIpfrbY