நல்ல குறும்படத்தின் இலக்கணம் என்ன என தேடினால் அந்தக் குறும்படத்தில் சொல்லப்பட்ட விசயம் ஒரே நேர்கோட்டோடு சென்று அதன் இலக்கை அடைவதே …
நிசப்தம் குறும்படம் முதியவர்களின் கதையை பேசுகிறது. இப்பிரச்சனையை சொல்லும் பல திரைப்படங்களும், குறும்படங்களும், பாடல்களும், வசனங்களும் வந்திருந்தாலும் கூட; இன்னும் இப்பிரச்சனை முடிந்தபாடில்லை.
சமீபத்தில் ஒரு முதியோர் இல்லத்திற்கு சென்றிருந்தேன். என் நண்பனின் பாட்டியை அங்கு சேர்த்திருக்கிறார்கள். அவர் எனக்கும் பாட்டிதான். சிறுவயதில் நண்பனோடு நான் பல முறை பாட்டியின் வீட்டிற்கு சென்றுள்ளேன். ஒவ்வொரு முறை செல்லும் போது பாட்டி பணம் தந்துகொண்டே இருப்பார். வெறுங்கையோடு எப்போதும் அனுப்ப மாட்டார். ”ஒரு சிறிய அறையில் பாட்டி திருநீறு பூசிக்கொண்டு முதியோர் இல்லத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கு ஆறு மகன்கள் எல்லோரும் அரசாங்க அதிகாரிகள். வசதிக்கு குறைவில்லை எனினும் பாட்டியை பார்க்க ஆள் இல்லை. நேரம் இல்லை . நல்ல வசதியான முதியோர் இல்லத்தில்தான் பணம் கட்டி அனுமதித்திருந்தாலும் கூட; பாட்டி நிம்மதியாய் இல்லை. பாட்டியை பார்த்துவிட்டு வரும்போது “எனக்கு கொடுத்த கைகளில் , பணத்தை வைத்தேன்” பாட்டி எதுக்கு வேண்டாம் என்றாள். இல்லை பாட்டி எவ்வளவோ செஞ்சிருக்கீங்க என்னால முடிஞ்சது என்றேன். பாட்டி புன்னகைத்தாள்..
நான் இங்கேயே சாகக் கூடாது; எனக்கு நாள் நெருங்கிருச்சுன்னா நம்ம ஊருக்கே கொண்டு போயிருங்க என்றார். கண்களில் நீர்கசிய சரி என்றேன். இந்தக்கதையை ஏன் சொல்கிறேன் என்றால், மதுரை மைந்தன் இயக்கிய நிசப்தம் குறும்படத்தை பார்க்கும்பொழுது எனக்கு பழைய நினைவுகள் திரும்பிவருகின்றன. கணவனின் அம்மாவை நேசிக்காத மனைவி. மனைவியிடம் குழந்தையின் அன்பால் சிக்கிக்கொண்டிருக்கும் கணவன். கணவனின் இயலாமையை புரிந்துகொண்டு அவனை வாட்டி வதைக்கும் மனைவி ஒரு முறை, தன் அம்மாவின் வருகையை மகிழ்சியாய் கணவனுக்கு தொலைபேசியில் தெரிவிக்கிறாள். பின் வீட்டிற்கு வரும்பொழுது தன் அம்மாவிற்கு உணவு பண்டங்கள் வாங்கிவர சொல்கிறாள்.
ஆனால் அதே வேளையில் கணவனின் அன்னை முதியோர் இல்லத்தில் அனுமதித்துள்ளார்கள். மகனுக்கோ அன்னையை தன்னோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசைதான். ஆனால் மனைவியின் தொந்தரவினால் முதியோர் இல்லத்தில் விட்டுவிடுகிறார். அம்மாவின் கடைசி நேரத்தில் அம்மா அவனுக்காக ஏங்குகிறாள்..
அப்போது மகனுக்கு அம்மா சொல்லும் வார்த்தைகள் அற்புதமானவை.. மகனே ஒன்னைய நல்லா கார வீட்ல, ஏசி ரூம் போட்டு ஆசைஆசையாய் வளர்த்தேன் . இன்னைக்கு எனக்கு இந்த நிலைமை வந்துருச்சு.. ஆனா இந்த நிலைமை உனக்கு வரக்கூடாதுய்யா என வருத்தப்பட்டுக்கொண்டே இறந்துவிடுகிறார்.
கருணை இல்லங்கள் என்ற பெயரில் எந்த வித வசதியுமில்லாமல் செயல்பட்டுவரும் அமைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம்; முதியோர்களை கஷ்டப்படுத்தவும் வேண்டாம் என்ற கருத்தையும் முன்வைக்கிறது.
குறும்படத்தில் ஒரு வசனம் வருகிறது.. அம்மா நீதான் என் சப்தம் , நீ இல்லாத இந்த வாழ்க்கை நிசப்தமே..
நண்பர் மதுரை மைந்தன் அவர்கள் எனக்கு 2012 ல் அறிமுகமானார். அப்போது நான் மதுரை வாசி அல்ல , திருமங்கலத்தில் இருந்தேன். முகநூல் வழியாய் நட்பானார். மதுரை மைந்தன் அவர்களை முதன் முதலாய் சந்திக்கும் போதே, தன் வித்தியாசமான சிந்தனையால் என்னை கவர்ந்தார். அன்பாக பழக கூடிய நல்ல மனிதர். நட்பை பெரிதும் போற்றுபவர். பல முறை அவரது கடைக்கு செல்லும்போதெல்லாம் , அவரது நாட்டுப்பற்றை பார்த்து வியந்துள்ளேன். இராணுவத்தில் பணிபுரிபவர்களை பெரிதும் மதிப்பவர்.