ஒரு வருடங்கள் சலனமற்று ஓடிக்கொண்டிருக்கும் இந்த ஹாச்சூ நதியைப்போல ஓடிவிட்டது. சுற்றியும் மலைகள் நிறைந்த ஒரு பள்ளமான மேட்டில் இருக்கும் இந்த இடத்தின் பெயர்தான் ஹா. எங்கள் இராணுவ கேம்பில் இருக்கும் பேரக்கின் ஜன்னல் வழியாய் பார்த்தாலே பெரிய கரும்பாறை கொண்ட மலைகளும், அதன் உள்ளிருந்து பெருகிவரும், ஊற்று நீர்களின் அழகையும் பார்த்து ரசிக்கமுடியும்.
பூட்டானுக்க வந்த நாள்முதல் பூட்டானின் கலாச்சாரத்தையும், அது சார்ந்த அனுபவங்களையும் மக்களிடம் பேசி அறிந்துகொள்ள முயற்சிக்கிறேன். அலுவலகப்பணிகளுக்கிடையே நேரம் மிகவும் குறைவாகவே கிடைத்தபோதும், சந்திக்கும் சில பூட்டானிய மனிதர்களிடம் பேசிவருகிறேன்.
எல்லோரும் எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்துவருகிறார்கள். அதிர்ந்துபேசாத மனிதர்கள். தெய்வ நம்பிக்கைகளின் மிகுதியால் , மூட நம்பிக்கைகளையும் கொண்டிருந்தாலும் , யாருக்கும் தீங்கு எண்ணாத மக்கள்.
இன்றைய மதியப்பொழுதிலிருந்து பனி தொடர்ந்து பொழிந்து கொண்டுள்ளது. அருகிலேயே ஹா நதி அழகாக ஓடிக்கொண்டிருக்கிறது. பால்யத்தில் சிலேட்டில் நதியை போலேயே வாத்தியார் பெரிய ரைட் போடுவார். அந்த ரைட்டினை போன்றே ஹா நதி வளைந்தும், நெளிந்தும், சில இடங்களில் சிற்றோடையாகவும், சில இடங்களில் பெரிய நதியின் வேகமெடுத்தும் ஓடிக்கொண்டிருக்கிறது.
அலுவலகப்பனிகளிடையே சில நாட்கள் தடைபட்டுப்போன வாசிக்காதா புத்தகங்கள் சில ஏன் என்னை இன்னும் தொட்டு வாசிக்காமல் உள்ளாய் என சின்ன கோபத்தோடு என்னை பார்த்துக்கொண்டே இருப்பது போல் உள்ளது.
இந்த குளிர்ச்சியான மகிழ்ச்சியான தறுணத்தில் பூட்டானில் நான் வாசித்த இரண்டு புத்தகங்களை பற்றிய பதிவை மீள் பதிவு செய்கிறேன்
மிக்க அன்புடன்
தேவராஜ் விட்டலன்
……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
பூட்டானுக்கு பணி நிமித்தமாக வந்த நாள் முதல் பூட்டான் நாட்டின் இயற்கை அழகையும், அமைதியான மக்களையும் கண்டு பழகியபின் அவர்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள இணையத்தில் பூட்டான் பற்றிய தகவல்களை தேடினேன். எனது அலுவலக நூலகத்திலிருந்து Journey Across Singye Dzong : A True Life Story… என்னும் Tandin wangchukஎழுதிய புத்தகத்தை படித்தேன். Singye Dzong என்ற கிழக்கு பூட்டானில் இருக்கும் மடாலயத்திற்கு நண்பர்களுடன் சேர்ந்து பயணித்த அனுபவங்களை அழகாக விவரித்திருப்பார். புத்தகத்தைப்படிக்கும் பொழுது நாமும்அவரோடு பயணிப்பதைப்போன்ற உணர்வுகள் மனதில் உண்டாகிறது.
சமீபத்தில் Hidden Bhutan: Entering the Kingdom of the Thunder Dragonஎன்றபுத்தகத்தைப்படித்தேன். Martin Uitz என்பவர்எழுதியிருக்கிறார். பூட்டான் நாட்டின் கலாச்சாரத்தைப் பற்றி அறிந்து கொள்ள இந்த புத்தகம் உதவுகிறது.
புத்தககடைக்கு சென்று பூட்டான் சிறுகதை புத்தகங்களை வாங்கலாம் என்ற சிந்தனையோடு திம்பு நகரத்திற்குள் நடந்தேன். மழைத்தூரிக்கொண்டேயிருந்தது; கூகுள் மேப்பிள் புத்தககடையின் முகவரியை தெரிந்துகொண்டு பயணித்தேன். சாலை தூய்மையாக இருந்தது. மக்கள் எந்தவித பரபரப்புமின்றி இயல்பாய் நடந்துகொண்டிருந்தனர். பூட்டான் முகங்களும், அதற்கு ஈடாக வங்காளிகளின் முகங்களும் மார்க்கெட்களில் தெரிந்துகொண்டிருந்தன.
புத்தககடைக்கு சென்று எனது விருப்பத்தைக் கூறினேன். அழகான பூட்டான் பெண் பில்லிங் செக்ஸனில் இருந்தாள். அவள் கண்கள் சிறியதாகவும், முகம் புன்னகையை ஏந்திக்கொண்டும் இருந்தது.
நான் பூட்டான் எழுத்தாளர்கள் எழுதிய பூட்டான் பற்றிய சிறுகதைகளை தேடினேன். ஆனால் அப்படியான புத்தகங்கள் கிடைக்கவில்லை . பின் Buttertea at Sunrise – Britta Das என்ற கனடா நாட்டைச்சேர்ந்த எழுத்தாளர் எழுதிய புத்தகம் கண்ணில்பட்டது புத்தகத்தை எடுத்து சில பக்கங்கள் புரட்டினேன். எளிமையான ஆங்கிலத்தில் நடை இருந்தது. வாங்கிவிட்டேன். பில்லிங் செக்ஸன் பெண் அழகாக புன்னகைத்துக்கொண்டு பேப்பர் கவரில் போட்டுக்கொடுத்தாள்.
அலுவலக அறைக்கு வந்து உடனே படிக்க ஆரம்பித்தேன் . கனடா நாட்டைச்சேர்ந்த பிசியோதெரபி படித்த மருத்துவரான பிரிட்டாதாஸ் தானாக பூட்டான் நாட்டில் பணியாற்ற விரும்பி 1997 ஆம் ஆண்டு வந்துள்ளார். அப்போது கிடைத்த அனுபவங்களை புத்தகமாக எழுதியுள்ளார்.
புத்தகத்தில் முதன்முதலில் பூட்டான் நாட்டில் வந்திறங்கியவுடன் கிடைத்த அனுபவங்கள். பின் கிழக்கு பூட்டானில் உள்ள மோங்கர் என்ற ஊரில் பணியாற்றிய அனுபவங்கள். அங்குள்ள மக்கள் அவரிடம் காட்டும் அன்பு என அனைவரையும் நேசித்த கள்ளம் கபடமற்ற அவர்களின் அன்பையும்; மோங்கர் மார்கெட்டில் கடைக்காரருடன் நடக்கும் உரையாடலையும் அழகாக பதிவு செய்துள்ளார்.
பூட்டான் பற்றி அறிந்துகொள்ள இந்த புத்தகம் மிக முக்கியமான புத்தகமாகும்.
when read your stories feel like your statement “புத்தகத்தைப்படிக்கும் பொழுது நாமும்அவரோடு பயணிப்பதைப்போன்ற உணர்வுகள் மனதில் உண்டாகிறது.”