மனமெங்கும் எழுத்தாளர் அசோகமித்திரன் நினைவுகளே நிறைந்திருந்தது.. மரணம் அவர் எதிர்பார்த்துக் காத்திருந்ததுதான் என்றாலும். நம்மால் அந்த மரணத்தை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இன்னும் சிறிது நாள் இருந்திருக்கலாம் என்ற ஆசை இருந்துகொண்டே உள்ளது.
இன்று அவர் பூத உடல் எரிக்கப்படலாம் ஆனால் அவர் எழுத்துக்கள் உருவாக்கிய சித்திரங்கள் எப்போதும் கடைசித்தமிழன் உள்ளவரை நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை..
அசோகமித்திரன் அவர்களின் படைப்புகளை மீண்டும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. புதிதாய் கட்டிய வீட்டை வாடகைக்கு குடுத்துவிட்டதால் புத்தகங்கள் அனைத்தும் ஏதோ ஒரு அட்டைப்பெட்டிக்குள் அடைக்கலம் புகுந்துவிட்டது. அந்த அறையை திறந்து எல்லாவற்றையும் புரட்டி அசோகமித்திரன் அவர்களின் படைப்புகளைத் தேடி எடுப்பதை விட திருமங்கலம் நூலகத்திற்குச் சென்றுப் பார்க்கலாம் என்ற எண்ணத்தோடு நூலகத்திற்குச் சென்றேன். வழியெங்கும் எப்போதும் போல் மக்கள் பரபரப்பாக தமது கடமைகளில் தொலைந்து போய் இருந்தனர். இதில் எத்தனைப் பேர் அசோகமித்திரன் அவர்களைத் தெரிந்திருப்பார்கள் எனத் தெரியவில்லை. எல்லோரும் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என அசோகமித்திரன் அவர்களே பல முறை சொல்லியிருக்கிறார்.
நூலகத்திற்கு வந்து அவரது படைப்புகளைத் தேட ஆரம்பித்தேன். கதைகள் பிரிவில் உடனே கிடைத்தது காந்தியும் புலிக்கலைஞனும் என்ற அவரது மூன்றாவது சிறுகதைத் தொகுதி…
காட்சிகள் என்ற கதையும், எலி என்ற சிறுகதையும் படித்தேன்.
இரண்டுமே மிக அருமையான சிறுகதைகள்.. படிக்கப்படிக்க கண்களில் நீர் கோர்த்துக் கொண்டு வந்தது..
அதில் மரணத்தைப் பற்றி அவர் …
“தானும் ஒருநாள் இப்படித்தான் சாம்பலாகப் போக வேண்டும். இந்த தள்ளாமை, வியாதி எல்லாம் பொசுங்கிப்போய்விடும்”
எலி என்ற சிறுகதையில்…
கணேசன் தனது வீட்டில் எலி செய்யும் அட்டூலியங்களை முடிவுக்கு கொண்டுவர … அவன் செய்யும் வேலைகளும்.. ஒரு வடையைத் தேடி இரவில் பயணித்து வடைக்காக காத்திருந்து வாங்கிவந்து எலிப்பொறியில் வைத்து எலியைப் பிடிப்பான்.. கதை சாதாரணமாகத்தான் முதலில் பயணிக்கும் ஆனால் அதற்குள் இருக்கும் அரசியல் , சமுதாயப் பார்வைகள், பதிவுகள் அனைத்தும் பொதிந்திருப்பதை நிதானமாகப் படித்துப் பார்த்தால் புரியும்..
எழுத்தே வாழ்வாக நினைத்து வாழ்ந்தவருக்கு,…அவரது படைப்புகளைப் படித்து விவாதிப்பதுதான் அவருக்குச் செய்யும் சிறந்த அஞ்சலியாக இருக்கும்.