முன்பொருநாள்
வீட்டில் திண்ணையிருந்து..
திண்ணையில்
பாய்விரித்து
துயில் எழும்போது
அரசமரங்களில்
பூபாளத்தை வரவேற்கும்
பச்சைகிளிகளின்
சப்தத்தை
கேட்கமுடிந்தது..
“காலங்காத்தால
எந்திருச்சு படிங்கடா”
என தன் மூங்கில்
கைத்தடியோடு
அன்போடு
அடிக்கும்
தாத்தாவின்
அன்பிருந்தது..
பங்காளிச்சண்டை
போடாத
உடன்பிறப்புகளின்
பாசமிருந்தது..
சாதிகள்
வேறுபாடின்றி
வாழ்ந்த
கிராமவாசிகளின்
கரிசனமிருந்தது..
நட்சத்திரங்கள்
கண் சிமிட்டும்
வானத்தோடு
குடங்களை எடுத்துக்கொண்டு
இரவிலும் ஓடி
அடிகுழாயில்
நீர் அடிக்கும்போது
முத்துவேணி அக்காவிற்கும்
கனகவேல் மாமாவிற்கும்
அன்பான காதலிருந்தது..
மாட்டுவண்டியின் கீழ்
கோணிச்சாக்குகள்
மறைக்க கயிற்று
கட்டிலில்
படுத்திருக்கும்
மாயாண்டி தாத்தாவிற்கு
இருபது பைசாவிற்கு
மூக்குப்பொடி
வாங்கித்தந்தபோது
மகிழ்ச்சியோடு
அணைத்து தன்
பொக்கைவாய் திறந்து
முத்தம் தந்தபோது
கருணையிருந்தது..
எல்லாம் இருந்தது
இப்போது
நினைவுகள்மட்டும்
எச்சமாய்!
——————————
நன்றி பயணம் இலக்கிய இதழ்
—————————–
Mikka makilchi
அருமை