எழுத்தாளனுக்கு வாழ்வியலை பதிவு செய்வதில் இருக்கும் முழு சுதந்திரம் நாவல் வடிவத்தில்தான் கிடைக்கிறது. அவன் நாவலின் வழியாய் நமக்கு காலத்தை பதிவு செய்து தருகிறான்.
சமீபத்தில் கா.நா.சு அவர்கள் எழுதிய ”வாழ்ந்தவர் கெட்டால்” என்ற நாவலைப்படித்தேன். ரகுவின் நண்பனான கதைசொல்லி நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் நண்பனான ரகுவை சந்திக்க தஞ்சாவூர் வருகிறான். நண்பனோடு தஞ்சையில் உலாவுகிறான், காலையில் , மாலையில் , காவிரிக்கரைகளில், பாலத்தில் என கருத்து ரீதியாக விவாதித்துக்கொள்கிறார்கள். அப்போது ரகு மிகுந்த மன உளைச்சலில் இருப்பதை கண்டுணர்கிறான்.
நடைப்பயணத்தில் சதாசிவ மம்மேலியார் தூரத்தில் வருவதை பார்த்து அவர் பக்கம் போக வேண்டாம் என்கிறான் ரகு. ஏன் நண்பன் அவரைப்பார்த்து பயப்பட வேண்டும். ஏன் பதட்டப்படுகிறான். என குழப்பத்தில் இருக்கிறான் கதைசொல்லி. இந்த விசயத்தை எப்படியாவது அறிந்துகொள்ள வேண்டும் என்ற தேடலில் பலரை சந்திக்கிறான்.
நாவலில் 1950 தஞ்சாவூரை காண்பிக்கிறார். ரெயிலடி, வெத்தலைப்பாக்கு கடைகள், கரைபுரண்டோடும் காவேரி என தஞ்சாவூரை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்.
சதாசிவ மம்மேலியாருக்கும், ரகுவிற்கும் உள்ள உறவென்ன.. அந்த மர்ம முடிச்சுகளை தன அழகான மொழி நடையில் அவிழ்த்துச்செல்கிறார்.
சதாசிவ மம்மேலியாரின் மரணம் ரகுவை மேலும் மனக்குழப்பத்திற்கு ஆளாக்குகிறது. அந்த மனக்குழப்பத்திலேயே ரகு மரணிப்பதில் முடிகிறது நாவல்.
நன்றாக வாழ்ந்து வீழ்ந்த குடும்பத்து கதையையும், தஞ்சையையும் மையப்படுத்தி எழுதியுள்ளார். கதைக்களம் சிறியதாக உள்ளதால் நாவலும் சிறியதுதான் ஆனால் நாவலில் அவர் காட்டும் வாழ்க்கைச்சித்திரம் பக்கங்களில் அடக்க முடியாதது.
அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய முக்கியமானப் புத்தகம்.