சில தினங்களுக்கு முன்பு மதுரையில் இருக்கும் புத்தக கடைகளில் “ நீலகண்ட பறவையைத் தேடி என்ற வங்க நாவலை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு தேடிக்கொண்டிருந்தேன். இரயில் நிலையத்தில் எதிரில் உள்ள மல்லிகை புத்தக கடை , இலக்கியப் பண்ணை, கோவில் வீதியில் உள்ள நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ்” என எனக்குத் தெரிந்த புத்தக கடைகளில் தேடினேன்.
கிடைக்கவில்லை…
பின் தங்க ரீகல் தியேட்டர் முன் உள்ள பழைய புத்தக கடைகளில் தேடினேன். பல நல்ல புத்தகங்கள் நமக்கு பழைய புத்தக கடைகளில் கிடைத்துவிடுகின்றன.
“நீலகண்ட பறவையைத்தேடி “என்ற புத்தகத்தை தேடியவன் , பாவம் இவள் ஒரு பாப்பாத்தி என்ற புத்தகத்தை எடுத்தேன், மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்டிருந்தது. ஜெயகாந்தன் அவர்கள் தமிழ் இலக்கிய உலகில் பெரும் சாதனைபடைத்தவர் என்பதை இலக்கியத்தை நேசிக்கும் அனைவரும் அறிவர். சென்ற தலைமுறையினருக்குத்தான் அவர் அதிக பரிச்சியமானவர் என்பது எனது எண்ணம். இந்த தலைமுறையினர் அதாவது என்னைப்போன்று 30 பதில் இருக்கும் நபர்களுக்கு அவரைத்தேடி படித்துதான் உணர்ந்துகொள்ள வேண்டும். இந்தப்பதிவு அவர்களுக்காகவே..
Youtube ல் தொடர்ந்து ஜெயகாந்தன் அவர்களைப் பற்றிய பதிவுகளையே பார்த்துக்கொண்டிருந்தேன். தனது அயராத உழைப்பால், வாசிப்பால் அவர் கண்டடைந்த உணர்வுகளை சிந்தையில் செலுத்தி, சமூகப் பிரச்சனைகளுக்கு தனது சிந்தையில் தோன்றிய கருத்துக்களை எழுத்துவடிவில் உருகொடுத்து “யாருக்கும் எந்த பயமுமின்றி” அவர் செயல்பட்ட அந்த 1960 வதின் காலங்கள்தான் எவ்வளவு அற்புதமானவை.
ஒரு குப்பத்தின் அருகில் ஒரு சர்க்கரை ஆலை உள்ளது. அந்த புகை கக்கும் சர்க்கரை ஆலையினால் குப்பத்து மக்கள் பல உபாதைகளுக்கு உள்ளாகின்றனர். அந்த குப்பத்தில் உள்ள படித்த இளைஞன் உள்ளான் அவன் பெயர் பரந்தாமன். பரந்தாமனின் அன்னையின் பெயர் பாப்பாத்தியம்மாள் (பிரம்ம நாயகி) .
பரந்தாமன் படித்து வேலையில்லாமல் கஷ்ட்டப்படுகிறான். அவனுக்காக பாப்பாத்தியம்மாள் ஊரில் இருக்கும் பெரிய மனிதர்களிடம் கும்பிடு போட்டு காண்ட்ராக்டர் வேணுப்பிள்ளையிடம் கணக்கு எழுதும் வேலை வாங்கித் தருகிறாள். அவள் குப்பத்தில் ஒரு டீக்கடை வைத்து நடத்துகிறாள். சில தினங்களுக்குபின் பரந்தாமன் “ அந்த வேலை தனக்கு பிடிக்கவில்லையென்றும், வேணுப்பிள்ளை பொய் கணக்கு எழதச்சொல்கிறான். அவன் மிக மோசமான ஆள், நான் அவனிடம் வேலை செய்ய மாட்டேன் என்று கூறுகிறான். பாப்பாத்தி அம்மாளும் அதுவும் சரிதான் , அப்படிப்பட்ட ஆளிடம் வேலை செய்ய தேவையில்லை என்கிறாள்,
சில காலங்கள் வேலையில்லாமல் இருக்கிறான் பரந்தாமன். அப்போதுதான் அனுக்கு துரைசிங்கத்தின் நட்பு கிடைக்கிறது. துரைசிங்கம் தொழிலாளர்களை இணைத்து அவர்களின் உரிமையை முதலாளிகளிடமிருந்துப் பெற்றுத்தர சங்கம் அமைக்க போராடிக்கொண்டிருக்கும் போராளி. அவரோடு பரந்தாமனும் சேருகிறான்.
பரந்தாமனின் எண்ணங்களை அறிந்துகொண்ட பாப்பாத்தியம்மாள் அவனுக்கு உதவி செய்கிறாள். பாப்பாத்தியம்மாளுக்கு கார்கி எழுதிய “ அன்னை” நாவலை படிக்கத்தருகிறான் பரந்தாமன்.
அவளும் ஆசையோடு வாங்கிப்படிக்கிறாள். இடையில் பாப்பாத்தியம்மாள் பற்றிய கதை நகர்கிறது. பாப்பாத்தியம்மாள் ஒரு பிராமணப்பெண். இங்கே பரந்தாமனின் பாட்டி வேதவல்லியின் கதையும் வருகிறது. வேதவல்லி திறமையான குப்பத்து கிழவி. அவளது பேரன்தான் பரந்தாமன். வேதவல்லி நல்ல சுருசுருப்பான படிக்கத்தெரிந்த கிழவி . கிடைக்கும் புத்தகங்களையெல்லாம் வாசித்து உலக விசயங்களை தெரிந்துகொள்ளும் நபர். வேதவல்லியின் மறைவிற்குபின் இப்போது பிரம்மநாயகி பரந்தாமனை வளர்த்து வருகிறாள்.
தொடர்ந்து தொழிலாளர்களுக்கான சங்கம் அமைக்க பாப்பாத்தியம்மாளின் கடையருகே இருக்கும் மரத்தினாலான கட்டிடத்தில் கூட்டங்கள் நடைபெறுல்கிறது அந்த கூட்டங்களில் மேலும் சில பெண் தோழர்களும் கலந்து கொள்கின்றனர். (ரமா, ஆஷா).
ஒரு கட்டத்தில் வேணுப்பிள்ளை கொலை செய்யப்படுகிறான்.
அந்த கொலையாளியைத்தேடிவரும் போலீஸ் இவர்கள் கூட்டம்போடும் கட்டிடத்தை உடைத்து சூரையாடுகின்றனர்.
பாப்பாத்தியம்மாள் எதுவும் தெரியாதது போல் கடை நடத்திக்கொண்டுள்ளாள்.
துரைசிங்கம், பரந்தாமன். ரமா, ஆஷா என அனைவரும் தலைமறைவாகின்றனர்.
நாவலின் இறுதியில் பரந்தாமனை போலீசார் சுட்டுக்கொலை செய்கின்றனர்.
பாப்பாத்தியம்மாள் அவன் என் மகனில்லை எனக்கூறுகிறாள்.
அங்கே ஒரு பிளாஷ் பேக் வைக்கிறார் ஆசிரியர்.
வேதவல்லி அம்மாளின் உண்மையான மகளின் மகன் தான் பரந்தாமன்.
இந்த பாப்பாத்தியம்மாள் (பிரம்மநாயகி) மகன் சிறுவயதிலேயே இறந்துவிட்டதாகவும் , இவள் பரந்தாமனின் வளர்பு அன்னையென வாசகர்களுக்கு சொல்கிறார் ஆசிரியர்.
நீதிமன்றத்தில் இறந்தது பரந்தாமன்தான் “ தன் மகன் இறந்ததினால்தான் இந்த அம்மாவிற்கு புத்தி பேதலித்துவிட்டது” எனக்கூறி அம்மாவை விட்டுவிடுகின்றனர்.
ஆனால் பாப்பாத்தியம்மாள் நல்ல புத்தியோடுதான் வாழ்ந்துவருகிறாள் என கதை முடிகிறது.
இந்த நாவலில் அக்காலத்தின் அரசியல் பிரச்சனைகள் பேசப்பட்டிருக்கின்றது. தொழிற்சங்கத்தலைவர்களைத் தேடி தேடி அழித்த அந்த காலத்திய கதையை மையமாக கொண்டு குறுநாவலை எழுதியுள்ளார் ஜெயகாந்தன்.
கார்கி எழுதிய “தாய்” நாவலின் சாயலும் இதில் இருக்கும் என்கிறார் ஜெயகாந்தன்.
அந்த கதையின் சாயல் இருந்தாலும், இந்த காலச்சூழலோடு , கதையை நகர்த்திச்செல்லும் அற்புதமான கதை சொல்லும் விதத்தாலும் , தன் மொழியினாலும் கதையில் வரும் முக்கிய கதாப்பாத்திரமான பாப்பாத்தியம்மாள் நம் மனதில் நின்றுவிடுகிறாள்.
இந்த புத்தகத்தை படித்துவிட்டு இரயில் ஜன்னல் வழியாய் பார்க்கிறேன் சூரியன் கிழக்கில் உதித்துக்கொண்டுள்ளான்.
ஜெயகாந்தன் அவர்களும் தமிழ் இலக்கியத்தில் சூரியனாய் வெளிச்சம் பாய்ச்சி சென்றவர்தான். அவர் மறைந்தாலும் அவரது எழுத்துக்கள் தமிழ் இலக்கிய உலகிற்கு சூரிய வெளிச்சமாய் என்றென்றும் ஒளிர்ந்துகொண்டுதானுள்ளது.
பல நாள் தேடலில் எழுத்தாளர் எம். ஏ. சுசீலா அம்மா அவர்கள்தான் நீல கண்ட பறவையை என்னிடம் சேர்த்தார் தோழர்…
சமூக சிந்தனைகளை, இலக்கியத்தில் கொடுத்தவர்!