நன்றி : வாசகசாலை இணையதளம்

2019 ஆம் ஆண்டின் சாஹித்திய அகாதமி விருதுபெற்ற இந்த நாவலை வாசிக்க வேண்டும் என்கிற என் ஆர்வத்தை எழுத்தாளர் ஜே.ஷாஜஹான் அவர்களிடம் கூறியபொழுது ”என்னிடம் சூல் நாவல் உள்ளது ஐம்பது பக்கங்கள் படித்துவிட்டேன் படிக்க நன்றாக உள்ளது, நீங்க வேணுமுன்னா படிச்சிட்டு குடுங்களேன்” என்றார்.

எழுத்தாளர் ஜே. ஷாஜஹான் அவர்களிடம் வாங்கிய சூல் நாவலை அன்றைய இரவிலேயே படிக்க ஆரம்பித்தேன். சில பக்கங்களிலேயே நம் வரலாற்றின் அற்புதமான மனிதர்கள் கண்முன்னே உழல்வது போன்ற உணர்வு எழத்துவங்கியது.

”பிரஷ்னேவ்” எழுதிய தரிசுநில மேம்பாடு என்னும் புத்தகத்தை படித்த பொழுது, அந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருந்த ஒரு சம்பவம்தான் தன்னை சிந்திக்க வைத்ததாகவும், அவர்கள் இயற்கையோடு கொண்டிருந்த வாழ்வின் அறம், ஆன்மீகத்தின் ஆணிவேர் இவை எல்லாம் சேர்ந்து நாவலை நோக்கிய தேடலை அதிகப்படுத்தியதாகவும் எனக் கூறுகிறார் எழுத்தாளர் சோ. தர்மன்.

ஊரே கூடியிருக்கும் அய்யானார் கோவில் புளியமர நிழலிருந்து நாவல் துவங்குகிறது. நாவலின் துவக்கத்திலேயே நாவல் காட்டும் காலம் பல நூறாண்டுகளுக்கு முந்தியது  என்பதை  உணர்ந்துகொள்ள முடிகிறது. ”நீர்ப்பாய்ச்சி” மணல் அள்ள கண்மாய் கரைகளை திறந்துவிடுகிறான். கண்மாயினால் பயன் அடைந்துவரும் ஊர் மக்கள் அனைவரும் கண்மாயின் மராமத்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நீர்ப்பாய்ச்சி கண்மாயில் மணல் அள்ள வரும் மாட்டுவண்டிகளை ஒழுங்குபடுத்திவிடும் பணியில் உள்ளான்.

மழைக்காலத்திற்கு முன்பே நீர் ஆதரமான கண்மாய் பராமரிக்கப்பட்டு, மணல் அள்ளப்பட்டு ஆழப்படுத்தப்பட்டு, மழைநீரால் சூல் கொள்ள தயாராக இருக்க  கண்மாயை கிராம வாசிகள் அக்காலத்தில் தயார்படுத்தியிருக்கின்றனர். நீர்மேலாண்மை எவ்வளவு நன்றாக கடைபிடித்து வந்துள்ளனர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

நாவலில் பெரும்பாண்மையான இடங்களில் பகிரப்பட்டுள்ள சொலவடைகளைப் படிக்கும்பொழுது அடிவயிற்றில் உண்டாகும் சிரிப்பு, தலைக்கு வந்து, மூளை வரைச்சென்று கண்கள் சந்தோசத்தில் குளமாகிவிடுவதை பல நேரங்களில் உணரமுடிகிறது.

குறிப்பாக முத்துவீரன், கொமராண்டி, சேவுகன், செம்பட்டையனும் செய்யும் சம்பாசனைகள் இரசிக்க முடிகிறது.

அந்த காலத்தில் இத்தகைய கேலியும், கிண்டலோடும்தான் மனிதர்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை நாவலைப் படிக்கும்பொழுது உணர முடிகிறது.

தொத்தல்  பகடை போன்ற மனிதர்கள் ‘கள்’ வாசனையை வைத்தே எந்த ஊர் கள் எனக்கூறும் அளவிற்கு தேர்ந்தவராக இருந்துள்ளார். தொத்தல் பகடை வழியாக நாம் அறிந்துகொள்வது அந்தக் கால மனிதர்கள் எவ்வளவு நுண் உணர்வுடன் வாழ்ந்திருக்கின்றனர் என்பதை அறிய முடிகிறது.

நீர்ப்பாய்ச்சி, மடைக்குடும்பன் என்ற பெயர்களில் கிராமங்களில் கண்மாய்களை பராமரிக்க மனிதர்களை நியமித்து, அவர்கள்தான் பரம்பரை பரம்பரையாக கண்மாயை பாதுகாக்கும் பணிகளில் ஆத்மார்த்தமாக செயல்பட்டு வாழ்ந்துள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.

நீர்ப்பாய்ச்சி பரம்பரையில் வந்த கருப்பன்தான் அய்யனார் சாமியின் அருகில் உள்ள கருப்பன் சாமி என்ற விவரத்தைக் கூறுகிறார்….

கண்மாயின் மேல்மடை, கீழ்மடை வழியாக வயல்களுக்குப் பாயும் தண்ணீர் நடுமடை வழியாக வெளியேரவில்லை, இதனால் நடுமடை வழியாக பயன் அடைந்துவரும் வயல்கள் வாடுகின்றன. வாடிய வயல்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் நீர்பாய்ச்சி பரம்பரையில் வந்த கருப்பன் மனம் வருந்துகிறான். ஊர்க்காரர்களின் பேச்சை கேட்க வேண்டியது வருமே என அய்யனார் சாமியிடம் மனம் வருந்தி வேண்டுகிறான்.

அவன் வேண்டுதலைக்கேட்டு பேசும் அய்யனார் சாமி நீ நாளை மடையில் மூழ்கி அடைப்பை நீக்க முயற்சி செய் கண்டிப்பா அடைப்பு நீங்கி நீர் வயல்களுக்குப் பாயும் என்கிறார். நீயும் என்னருகிலேயே வந்து தெய்வமாவாய் நாம் இருவரும் சேர்ந்து கண்மாயை காவல் காக்கலாம் என்கிறார்.

அதேபோலவே மறுநாள் நீர்ப்பாய்ச்சி கருப்பன்   ஊர்க்காரர்கள் அனைவரயும் எல்லா தெருக்கல் வழியாய் சென்று “ இன்னைக்கு நடுமடை திறக்கும் எனக்கூறுகிறான்.

ஊர்மக்களில் சிலர் இத்தனை நாள் முயற்சித்து திறக்காத மடை இப்போ திறக்கப்போகிறதா எனப் பேசிக்கொண்டும், என்னதான் நடக்கும் என்று பார்ப்போம் என எண்ணிக்கொண்டும் கண்மாய் கரையில் கூடுகின்றனர்.

நீர்ப்பாய்ச்சி கருப்பன் மடையில் மூழ்குகிறான் சிறிது நேரத்திலேயே நடுமடையிலிருந்து தண்ணீர் வெளிவருகிறது. ஊர்மக்கள் மகிழ்ச்சியில் தத்தளிக்கின்றனர்.

நீண்ட நேரமாக நீர்ப்பாச்சி கருப்பன் மேலே வரவில்லை அவன் உடல் மட்டும் சிறிது வேளைக்குப்பின் கண்மாயில் மிதக்கிறது.

மனதை நாவலில் ஒன்றிப்போகச் செய்யும் எத்தனையோ கதாப்பாத்திரங்கள் நாவலில் நிறைந்துள்ளனர்.

கொப்புளாயி இருக்கன் குடி மாரியம்மன் கோவிலுக்குச் செல்பவர்களுக்கு தயிர்ப்பாணை வைக்கிறாள்.  மரங்களை நடுகிறாள். வனத்தை உருவாக்குகிறாள். மக்களின் மேல் கருணையோடு வாழ்கிறாள். அநாதையான காட்டுப்பூச்சி என்ற சிறுவனை வளர்க்கிறாள்.

அவன் அடிக்கடி ஓடிப்போகின்றவனாக இருந்தாலும் அவன் மேல் கருணை கொண்டு இருக்கிறாள்.  கொப்புளாயி இறந்தபின் காட்டுப்பூச்சி மரங்களை நட்டு வளர்க்கிறான்.

மாடுகளைக்கொன்றதினால் கூனிப்போய்  மாடைப்போன்று நடந்து திரியும் நங்கிரியானின் கதையும் நமக்கு அக்காலத்தில் பாவம் செய்தவர்களுக்குப் பாடமாகி நின்ற கதையை கூறுகிறது.

நாவலில் இன்னும் பல கதாப்பாத்திரங்கள் மனதில் நிறைந்துள்ளனர். எட்டையபுர அரசர் ஆட்சி, கட்டபொம்மன்  வெள்ளைக்காரர்களிடமிருந்து தப்பித்து காடுகளில் மறைந்த கதை, ஊமைத்துரை வெள்ளையர்களிடமிருந்து தப்பித்து மீண்டும் கோட்டை அமைத்து வெள்ளையர்களை தாக்கி மடிவது என வரலாறையும் ஒற்றியே  நாவல் நகர்வது சிறப்பான ஒன்று.

எலியன் , பிச்சை ஆசாரிக்கு கிடைக்கும் நகைகளை அவர்கள் பயன்படுத்த முடியாமல் பூமிக்குள் மறைத்துவைத்து விளக்கேற்றி வழிபடுவதும், கோணக்கண்ணன் அவர்களை சந்தேகித்து பின் தொடர்வதும், நாவலில் சிரித்து மகிழும் கதாப்பாத்திரங்கள்.

நாவலில் ஒவ்வொரு காலமும் அழகாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த அந்த காலத்தில் எப்படி கண்மாய் கொஞ்சம் கொஞ்சமாய் தன் பொலிவை, சிறப்பை இழந்து வருவதை சுட்டிக்காட்டிச் செல்கிறார்.

உருளைக்குடி கிராமம் எப்படி தன் வரலாற்றுச் சிறப்பை இழந்து நிற்கிறது என்பதை நாவலின் இறுதியில் படிக்கும்பொழுது மனம் கணந்து விடுவதை தவிர்க்க இயலவில்லை.

நாவலை படித்துவிட்டு பால்யத்தில் கிராமத்தில் விளையாடி முங்கி நீச்சலடித்த கண்மாயை சென்று பார்த்தேன்.  கண்மாய் கரைகளிலிருந்த பெரிய பெரிய ஆலமரங்கள் காணாமல் போய்விட்டிருந்தது, கண்மாய் ஆழமில்லாமல் மேடேறிபோயிருந்தது. கண்மாயைப் பார்க்கவே மனம் வருந்தியது.

கால காலமாய் நீர்மேலாண்மையை மேம்படித்தி வாழ்ந்த நம் முன்னோர்கள் உருவாக்கிய கண்மாய் பொழிவிழந்து நிற்கிறது.

மதுரையில் ஒரு பிரபலமான கல்லூரி இருக்கும் சாலையின் ஓரத்தில் அமைந்திருக்கும் தேநீர் கடையில் நண்பர் சித்திரைவீதிக்காரன் அவர்களோடு சூல் நாவல் குறித்து பேசிக்கொண்டிருந்தேன். பசுமை நடை என்ற சூழலியில் அமைப்போடு சேர்ந்து செயல்படும் மிக முக்கியமான நபர் சித்திரைவீதிக்காரன். இவர் எழுதியுள்ள திருவிழாக்களின் தலைநகரம் என்னும் புத்தகம் மதுரையிலும், மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் திருவிழாக்களைப் பற்றி மிகத்தெளிவாக பேசுகிறது.

சித்திரைவீதிக்காரன் சொன்னார் “ நீங்க ஏன் சேர் உங்கள் ஊரில் இருக்கும் கண்மாய் வரை போய் சென்று பாக்குறீங்க  இங்க எதுத்தாத்தப்புள இருக்குற கோவிலைப் பாருங்க என்றார். பரபரப்பான அந்த சாலையின் ஓரத்தில் “ மடைகாத்த அய்யனார் கோவில்” என எழுதியிருந்தது. வாகனப்புகைகளினால் அழிக்கேறிப்போயிருந்தது எழுத்துக்கள். இந்த இடமே பெரிய கண்மாய்தான் சார். அந்த கண்மாய் கரையில்தான் மக்கள் மடைகாத்த அய்யனார் கோவிலை உருவாக்கி வழிபட்டு வந்துள்ளனர்.  இப்போது மடை, கண்மாய் என எல்லாம் அழிஞ்சிருச்சு இந்த அய்யனார் கோவில் மட்டும்தான் அழிந்த கண்மாயின் எச்சமாய் நின்னுகிட்டு இருக்கு என்றார். மனம் கணத்துவிட்டது. நாம் ஒரு கண்மாயின் மேல்தான் நின்றுகொண்டிருக்கிறோம் என எண்ணும்போது கூச்சமாயிருந்தது.

பிரிட்டிஸ்காரன் நம்மள விட்டுட்டு போறப்ப மூன்று லட்சத்திற்கும் மேலான கண்மாய்களை நம்மளிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றான். இப்போது நம்மிடம் எத்தனை கண்மாய்கள் எஞ்சியுள்ளன என நாவலின் வழியாய் கேள்வி எழுப்புகிறார் சோ.தர்மன்.

குடிமராமத்து என்ற ஊர்வாசிகளால் நடைமுறைப்படுத்துப்பட்டு வந்த செயல்பாட்டை சுதந்திரம் அடைந்தபின் அமைந்த இந்திய அரசாங்கம் அந்த திட்டத்தை காணாமல் செய்துவிட்டது என ஆதங்கப்படுகிறார். இப்போதிருக்கும் பல துறைகளுக்குள் கண்மாயை சிக்கவைத்து குடிமராமத்துப் பணிகள் செய்யாமல் கண்மாய்கள் எல்லாம் காணாமல் போய்விட்டது என வருந்துகிறார்.

இன்றிருக்கும் மோசமான  சூழலில் நீர்மேலாண்மையின் தேவையை நமக்கு உணர்த்துகிறது இந்த சூல் நாவல். கண்மாயையும் கண்மாய் மனிதர்களையும் சுமந்திருக்கும் இந்த சூல் நாவல் அனைவரும் படிக்க வேண்டிய மிக முக்கியமானப் புத்தகம். சூல் காட்டும் பாதை நாம் மறந்துவிட்ட பாதை, அந்தப் பாதையைத் தேடிப் பயணித்து, செப்பனிட்டு புதிய செழிப்பான பாதையாக மாற்ற அனைவரும் சேர்ந்து முயற்சிப்போம்.

                                    பாதைகளைத் தேடி புத்தகங்களுடன்..

6 Responses so far.

  1. நாவலைப் பற்றிய நல்ல அலசல் பதிவு…அருமை சார்.

  2. நாவலைப் படித்தே ஆகவேண்டும் என்ற ஆவலைத் தூண்டிய பதிவு. ❤️

  3. அருமையான பதிவு

  4. Manthira says:

    சூல் நாவலைக் குறித்த சிறப்பான வாசிப்பனுபவப் பதிவு.

  5. இதில் உள்ள தொன்மங்கள் குறித்தே ஒரு தனி ஆராய்ச்சி நூல் எழுதலாம்.
    சிறப்பான பதிவு.

  6. மதிப்பரை படிக்க தூண்டுகிறது..
    நீர் ஆதாரங்கள்
    அழிந்து வரும் சூழலில் சூல் அவசியம் என
    சகாத்திய அகாடமி
    விருதளித்து சிறப்பித்தள்ளது
    சிறப்பே!


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube